10 November 2013

தொட்டிச் செடிகள் - Potted Plants - four poems in Tamil

என்னுடைய நான்கு கவிதைகளை நான் காண்பித்தவுடன் அவற்றை பிரசுரித்த மோனிகாவுக்கு நன்றி...

கவிதைகளுக்கு  இணைப்பு இங்கே

இந்த சுட்டியை சொடுக்குங்கள்.... தொட்டிச்செடிகள்

தடயம்
தினம் கடக்கும் பாதையை
ஏதோ நினைத்து திரும்பி பார்த்த
வழிப்போக்கியின் நிலை இன்றெனக்கு
மலைச்சரிவு, தூரத்து பனிமூட்டம்
குளிரில் பெருத்த மரக்கிளை பறவைகள்
பனிவிழுந்த புற்களை நிமிண்டும்
கன்றுக்குட்டியின் அவசரம்,
வெள்ளை ஆந்தையின் கவனப்பார்வை
நடுவே அகலும் தார்ச்சாலையில்
ஆங்காங்கே மழைநீர் குட்டைகள்
நீரில் பட்டுத்தெறித்த வெளிச்சத்தில்
நம் கால்தடங்களின் பின்னல் கோலாட்டம்.
அங்கே கண்ணில் பட்டவை சில
நீரில் கரைந்து மறைந்தவை சில.
நெருடல்
நேற்று விழாவில் பார்த்தது
அதே முகம்தான்
சந்தேகமில்லை
அர்த்தங்கள் பொதிந்த புன்னகை
பூத்தொடுக்கையில் விட்டுவிட்ட ஊசியைபோல
இலக்கை தேடும் அலங்கார பேச்சு.
மெளனிகளை வலிய இழுக்கும்
அதிகார உடல்மொழி
இவனேதான் விஷமி
மறைந்திருந்த நினைவுச்சுருக்கம் ஒன்று
இரவு பறவையாய்
ஒரு இரைச்சலுடன் வெளியே கசிந்தது
இனி துயிலின் கருமையில்
அமைதி மட்டுமே ஒளிரும்.
தொட்டிச்செடிகள்
வெயிலுக்கு பயந்து தினமும் நம் பலகணியில்
நிழலான கூடலை தேடிக்கொண்டன அந்த ஜோடிப் புறாக்கள்
பிடிவாதமாய் மல்லிகை தொட்டிகளின் நடுவே குடைந்து
மெதுவாய் கட்டுகின்றன எளிய கூடு ஒன்றை.
குட்டிப்புறாக்களின் வரவை எதிர்நோக்கும் உன்
கண்களில் மீண்டும் ஒரு இளம் கண்ணாடி பளபளப்பு.
புறாவுடன் எனக்கான சண்டைகளை .உணரா ஜொலிப்பு அது.
அடுக்கு மல்லிகை தொட்டிகளில் படுத்துக்கொள்வது
எல்லாவிடத்திலும் இறக்கைகளை விட்டு செல்வது
சின்ன மொட்டுகளை நோண்டுவது, எச்சமிடுவது என்று
புறாக்களினால் தொல்லை பலவிதம், அறியமாட்டாய் நீ.
உனக்காகவும் காதலுக்காகவும் விட்டு வைத்த
புறா ஜோடியோ இடத்தை காலி செய்வதாயில்லை
சில காக்கைகளையும் இன்று விருந்துக்கு அழைக்கின்றன.
எங்களின் சண்டைகளெல்லாம் சரவெடிகளாய் நீளுகின்றன
புறாகாற்றை சுவாசித்த மல்லிகை செடிகளும் இப்போதெல்லாம்
இடப்பகிர்வை நினைத்து செல்லம்கொஞ்சுவதில்லை.
வெள்ளியிரவு
கோடைநாட்கள் இம்முறை அளவுக்கதிகமாய் நீண்டன
வெற்றுக் காகிதங்கள் மட்டும் கொண்ட புத்தகமாய்
காற்றுவீசாத மணிநேரங்களாய்
அடுக்கடுக்காய்
நாட்கள் தவறாது ஒன்றின்பின் ஒன்றாய் வெயிலின் அணைப்பில் கட்டுண்டன
இருண்ட கண்களை தினமும் அழுத்தியது கனவுகளின் பேயுருவம்
நிற்பதறியாமல் வழுக்கிச்செல்லும் கடிகாரமுள் தினம் ஓடுகிறது சுற்றிச்சுற்றி.
அவ்வப்போது தலையிட்டு வெம்பிய இருளை ஒற்றியெடுக்கும் நிலவோ
கடலின் நடுவே வெள்ளி துகள்களை பூசி ஒப்பனை செய்யும்.
வெண்மை குழையும் ஆழிக்கடலின் கரையில் இரவுகளை தேடுவோம்
அப்போதெல்லாம்.



08 November 2013

அம்மா உன்னை நான் கண்டதில்லை - ஜோதி லாஞ்சேவரின் கவிதை மொழிபெயர்ப்பு

உன்னை நான் என்றுமே கண்டதில்லை

அம்மா
தங்க சரிகையிட்ட புத்தம் புது
ஈரக்கல் பட்டு சேலையில்
உன் கழுத்தோடு
தங்கக் காசு மாலையுடன்
உன் மணிக்கட்டுகளில்
வளையல்களுடனும் சங்கிலிகளுடனும்
உன் காகளில் ரப்பர் செருப்புகள் அணிந்துகொண்டும்
உன்னை நான் கண்டதில்லை

அம்மா
கூலியாட்கள் கூட்டத்துடன்
சாலைகளை ரிப்பேர் செய்தபடி
உன் வெற்றுக் கால்கள்
எரியும் நிலத்தின் மீது பற்றி எரிய
முட்களடர்ந்த கருவேல மரத்தின் கிளைகளில்
உன் குழந்தை
ஏதொ ஒரு துணியில் தூங்க
தார்ச்சட்டிகளை சுமந்த
உன்னை நான் கண்டேன்

உன் தலையில் மண் கூடைகள்
கால்கள் இலைகளாலும்
கந்தல்களாலும் சுற்றப்பட்டிருந்தன
தினக்கூலிக்காய்
நீ அடிமைப்பட்டிருக்கையில்
தத்தித்தத்தி ஓடி வந்த உன்
அம்மணக் குழந்தையை முத்தமிட்ட
உன்னை நான் கண்டேன்

ஏரியில் அணை கட்ட உதவினாய்
சங்கிலித் தொடராய் உன் பின்னே
கண்ணீரை வடித்துக்கொண்டு வந்த
குழந்தைக்கு வியர்வைகலந்த முத்தமிட்டு
உன் அடி வயிற்றை பிசைந்தபடி
தாகத்தால் வதைக்கப்பட்டு
உனக்கே உதடுகள் வறளுகையில்
உன்னை நான் கண்டேன்.

வண்டி வண்டியாய் தலை மீது
சிமெண்டையும் மண்ணயும்
சுமந்து கொண்டு
கவனமாய்
கர்ப்பம் தரித்து வீங்கிப்போன
உன் கால்களை பதித்தபடி
அழகிய புதுமனையின் உயரே
நீ மூங்கில் சாரத்தில் ஏறும்போது
உனதென்று சொல்ல நான்கு சுவர் கொண்ட
இருப்பிடம் இல்லாமல்
உன்னை நான் கண்டேன்

மாலை மங்கும் நேரத்தில்
மார்போடு குழந்தையை அணைத்து
உன் முந்தானையின் சின்ன முடிச்சை
அவிழ்த்தாய்
கொஞ்சம் எண்ணையும் உப்பும் வாங்க
பளபளத்த சின்னக்காசு ஒன்றை சேமித்தாய்
என் சின்னஞ்சிறு உள்ளங்கையில்  வைக்க
“போய் ஏதாச்சும் வாங்கித் தின்னு
அம்பேத்கரப்போல பெரிய படிப்பு படி
நான்தான் கூடைகளை சுமக்கிறேன்”
என்று சொன்ன உன்னை நான் கண்டேன்

உன் உடம்பை கட்டைகளாக எரித்துக் கொண்டும்
அடுப்பில் எரிபொருளாய் ஒரு கத்தை
உலர்ந்த கரும்புச் சக்கையை
கொளுத்திக் கொண்டும்
எல்லோருக்கும் நான்கு பக்ரிகளை பங்கிட்டு
நீ மட்டும் அரை பட்டினியாய்
ஒரு சின்ன துண்டை உன் சேலையில்
பிறகு சாப்பிடவென முடிந்தபோது
உன்னை நான் கண்டேன்

பாத்திரங்கள் தேய்த்தாய்
துணிமணிகள் துவைத்தாய்
நான்கு வெவ்வேறு வீடுகளில்.
இருந்தும் மிச்சம் மீதிகளை
ஏற்க மறுத்தாய்
சுயமரியாதையுடன்
ஏழுமுறை  கிழிந்த
எண்ணில்லா சின்னச் சின்ன தையல்கள்
போட்டு வைத்த
உன் கந்தல் சேலையால் உன்னை நீ
தன் மானத்துடன் போர்த்திக் கொண்டாய்.
உன்னை நான் கண்டேன்.

ஊர்ச்சந்தையின் நட்ட நடுவில்
உன் மீது காமப்பார்வை
வீசத்துணிந்தவர்களின்
ஆத்தாளையும்
அக்காளையும்  ஏசிய
உன்னை நான் கண்டேன்

முந்தானை சுருளை தலைமீது வைத்து
கனமான பழக்கூடைகளை சுமந்தாய்
மக்கள் நெரிசலில்
உன் மீது இடிக்க துணிந்தவர்களை
செருப்பை தூக்கி மிரட்டிய
உன்னை நான் கண்டேன்

மலையென தூக்கிச் சுமந்த
உன் வேலைகளை செய்தபின்
நாளின் முடிவில் நான் பார்க்கையில்
வீடு நோக்கி திரும்பிய உன் கால்கள்
இருளை கூறிட்டன
குடி போதையில் வந்த உன் புருசனை
கோபத்தோடு வெளியேற்றிய
உன்னை நான் கண்டேன்

 புடவையை இடுக்கிக்கொண்டு
நீண்ட நெடும் பயணத்தில்
முன்னே நடந்தாய்
”நாம் நமது பெயரை மாற்ற வேண்டும்”
என்று முழக்கமிட்டபடி
சுரீரென்று போலீஸ் லத்தியை தாங்கி
தலை நிமிர்ந்தபடி
சிறைக்குச் சென்ற
உன்னை நான் கண்டேன்

போலீஸ் துப்பாக்கிக்கு பலியான
உன் ஒரே மகனிடம்
நீ பீமனுக்காக செத்தவண்டா
உன் உசிருக்கு அர்த்தத்தை
தேடிக்கிட்டடா ராச”
என்றாய்
உனக்கு இரண்டு அல்லது மூன்று மகன் கள்
இருக்க மேலும் பாக்கியம் செய்திருந்தால்
நீ மீண்டும் போரிட்டீருப்பாய்
என்று போலீசை எதிர்த்து  பேசின
உன்னை நான் கண்டேன்

உன் மரணப்படுக்கையில்
உன் கடைசி வினாடிகளை
எண்ணிக்கொண்டு
குப்பை சத்தகள் பொறுக்கி
அலைந்து திரட்டிச் சேமித்த பணத்தை
பொதுச் சேவைக்கு நன்கொடையாக்கிய
உன்னை நான் கண்டேன்

”ஒற்றுமையாய் இருங்க
பாபாசகேப்புக்காக போரிடுங்க
அவர் நினைவா ஒரு சின்னம் கட்டுங்க.”
என்றபடி  உன் கடைசி மூச்சுடன்
“ஜெய் பீமா,” என்ற வார்த்தைகள்
உன் உதட்டோடு ஒலிக்க
உன்னை நான் கண்டேன்.

புத்தம்புது ஈரக்கல் சேலைக்காய்
ஜெபமாலையை உருட்டிக்கொண்டு
உன்னை நான் என்றுமே கண்டதில்லை.

அம்மா உன்னை நான் கண்டேன்
  
The English Version... not the one I translated but something that's close can be found at the following link
http://roundtableindia.co.in/lit-blogs/?tag=jyoti-lanjewar